மீண்டும் "வெயில்".. காணாமல் போய் திரும்பி வந்த காதலியைக் கண்ட காதலன் மன நிலையில் சென்னை!
சென்னை: சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வானம் மிகத் தெளிவாக காணப்படுகிறது. வழக்கமான சுள்ளென்ற வெயிலும் திரும்பியுள்ளது. இதனால் தண்ணீரில் மிதந்து மிதந்து சலித்துப் போய் விட்ட மக்கள் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
எவ்வளவு வெயில் அடித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனம் படைத்தவர்கள் சென்னை மக்கள். நீ எவ்வளவு வேணுமனாலும் அடிச்சிக்கோ, நாங்க அசர மாட்டோம் என்று தெம்பாக நிற்பார்கள்.
ஆனால் மழை பெய்தால்தான் சென்னைக்கு சிக்கலாகி விடும். ஓவராக மழை பெய்தால், ஊர் தாங்காது, மக்கள் தாங்க மாட்டார்கள். இது வரலாறு.
தீபாவளிக்கு முதல் நாள் முதல்
தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் செமையாக மழை பெய்தது. அடுத்து ஒரு நாள் கேப் விட்டது. அதன் பிறகு பிடித்தது பாருங்கள் அடை மழை.. நேற்று முன்தினம் இரவு வரை விடாமல் வெளுத்தெடுத்து விட்டது, விட்டு விட்டு.
வெள்ளக்காடான தலைநகரம்
இந்தத் தொடர் மழையால் தமிழகத்தின் தலைநகரம் தண்ணீர் நகரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்தான். மக்கள் நனைந்து நனைந்து ஊறிப் போய் விட்டார்கள்.
மழை நின்றது
தற்போது மழை நின்று விட்டது. நேற்று காலை முதல் மழை இல்லை. சென்னை நகரிலும் தேங்கிய நீர் வடியத் தொடங்கி விட்டது. நேற்று காலை முதலே மெதுவாக வெயில் அடிக்கத் தொடங்கியது.
பளிச் வானம்
இன்று காலை முதல் வானம் படு தெளிவாக காணப்படுகிறது. சுள்ளென்று வெயிலும் அடிக்கிறது. இதனால் சென்னை மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இத்தனை நாளாக காணாமல் போயிருந்த சூரியனைப் பார்த்தும், காணாமல் போய் திரும்பி வந்த காதலியைக் கண்ட காதலனின் நிலையில் உள்ளனர் சென்னை மக்கள்.
சுறுசுறுப்பு
ஊரே வழக்கமான சுறுசுறுப்புக்குத் திரும்பியுள்ளது. இன்று கார்த்திகை திருவிழா வேறு. இதனால் சென்னை மக்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதிலும், துணிகளைத் துவைத்துக் காயப்போடுவது என்றும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றன. அலுவலகம் செல்வோரும் நிம்மதியாக செல்வதைக் காண முடிந்தது.
போக்குவரத்து நெருக்கடி இல்லை
இன்று சென்னை நகரில் பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் செல்லும் நிலை உள்ளது. தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் மட்டுமே சற்று சிக்கல் காணப்படுகிறது.
இவங்களும் உற்சாகத்தில்
மழை முடிந்தும் கூட இன்று எக்ஸ்ட்ரா லீவு கிடைத்த உற்சாகத்தில் பள்ளி மாணவர்களும் ஜாலியாக காணப்படுகின்றனர். இருப்பினும் நாளை முதல் மறுபடியும் ஸ்கூல் போகனுமே என்ற லைட்டான எரிச்சலையும் அவர்களிடம் காண முடிகிறது. இன்று இரவுக்கு மேல் மழை பெய்தால் நல்லாயிருக்கும் என்ற "பிரார்த்தனை"யிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்!
மொத்தத்தில் இந்த வெயில் சென்னை மக்களை சுற்று புன்னகைக்க வைத்துள்ளது.