நெல்லை அருகே மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 12 பேர் காயம்.. போக்குவரத்து பாதிப்பு
நெல்லை: திருநெல்வேலி அருகே இடி தாக்கி 5 பெண்கள் உட்பட 12 விவசாயிகள் காயடைந்துள்ளனர்.
நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கருங்குளம். இதன் அருகே வாழைத்தோட்டத்தில் இன்று சில விவசாயிகள் பணியில் இருந்தனர்.
அப்போது இடியுடன் மழை கொட்டியது. எனவே சாலையோர மரம் ஒன்றின் அடியில் அவர்கள் ஒதுங்கினர். இடி மரத்தில் விழுந்ததால் மரம் பிளந்து விழுந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 5 பேர் பெண்கள்.
இவர்கள் அனைவரும், கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மரம் விழுந்திருந்ததால், இருபுறமும் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. எனவே காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் நெல்லை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே பேய்க்குளம் வழியாக சுற்றிக்கொண்டு காயமடைந்தவர்கள் நெல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.