தூத்துக்குடி கொடூரம்.. மக்கள் மனதில் ஊற்றெடுக்கும் கேள்விகள்.. பதில் தருவார் யாரோ?
12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் மக்கள் மனதை அரித்தெடுக்கிறது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 100 வது நாள் மக்கள் நடத்திய மக்களின் எழுச்சிக்கு கிடைத்த கொடூர பரிசினை நினைத்து தமிழக மக்கள் புழுங்கி துடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த அவலம் என்று தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு சாமானியன் மட்டுமல்ல அடுத்தமாநில மக்களுமே மண்டை காய்ந்து, கொதித்து போயிருக்கிறார்கள். உணர்வுள்ள ஒவ்வொரு மனிதர்களின் எண்ண ஓட்டங்களுக்கும், அவர்களின் மனதில் எழும் நியாயமான கேள்விகளுக்கும், ஓராயிரம் குழப்பத்துடன் இனி எப்படி வாழப்போகிறோம் என்ற குழப்பத்துடனும் தவித்து வரும் இந்த கேள்விகளுக்கெல்லாம் யாராவது பதில் சொல்வார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1. தூத்துக்குடியில் முற்றுகை போராட்டம் என்றுதானே பொதுமக்கள் அறிவித்திருந்தார்கள்... போலீசார்களுக்கென்று சீருடை இருக்கும்போது, போராட்டக் களத்திற்கு முதலில் மப்டியில் வரவேண்டும்?
2. அதற்கு எதற்கு பயங்கர ஆயுதங்களான அதிநவீன துப்பாக்கியுடன் வரவேண்டும்?
3. சாதாரண போலீசார் வந்திறங்காமல், எதற்காக கமாண்டோக்கள் இறக்கப்பட்டார்கள்?
4. துப்பாக்கி சூடு நடத்தும் உத்தரவை காவலர்களுக்கு யார் பிறப்பித்தது?
5. கலவரம் நடந்தால் முதலில் முதலில் கைது தானே செய்திருக்க வேண்டும்?
6. வானத்தை நோக்கிதானே துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும்?
7. அப்படியே எல்லைமீறி போராட்டக்காரர்கள் நடந்துகொண்டால், முட்டிக்கால் பார்த்துதானே சுட வேண்டும்? எப்படி குறிபார்த்து நெஞ்சை நோக்கி சுட்டார்கள்?
8, வன்முறை, கலவரம், போராட்டக்களம் என்று பல வடிவ பெயர்களில் அழைத்தாலும் ஒரு போலீசாரோ அரசு அதிகாரிகளோ உயிரிழக்கவில்லையே எப்படி?
9. மூட்டை மூட்டையாய் பணத்தை வாரி சுருட்டியவர்களையெல்லாம் வெளிநாட்டுக்கு தப்ப வைத்துவிட்டு, இன்று நீதியும், உரிமையும் கேட்டு வந்தவர்கள் எப்படி திடீரென போலீசார் கண்களுக்கு தீவிரவாதிகளாக காட்சியளித்தார்களே எப்படி?
10, டிஜிபி உத்தரவு இல்லாமலேயே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதா?
11. பொதுமக்களே அதிகம் கூடாத இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது எப்படி?
12, எந்த போலீசார் மீதும் எதிர்தாக்குதல் என்பது நடத்தியதாகவே தெரியவில்லையே?
13. நீண்ட தூரத்திலிருந்து குறிப்பிட்ட ஆட்களை மட்டும் குறிபார்த்து சுட்டுத்தள்ள காரணம் என்ன?
14. கடந்த 100 நாட்களாக நடந்து கொண்டிருந்த பிரச்சினையின்போது மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
15. 100 நாள் போராட்டம் என்பது சாதாரணமான விஷயமா? ஒவ்வொருத்தரும் தன் குடும்பம் குட்டிகளோடு நாளெல்லாம் விழுந்துகிடந்து போராடுவது உங்களை போன்றவர்களுக்கும்தான் என்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?
16. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என்ற அறிவிப்பு தெரிந்தும் கலெக்டர் எங்கே போனார்?
17. ஒரு தாசில்தார் அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படும் ஆட்சியர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில், அதுவும் தன்னுடைய அலுவலகத்திலேயே இவ்வளவு அக்கிரமங்களும் அரங்கேறும்போது, சம்பவ இடத்தில் அவர் இல்லாமல் போனது ஏன்?
18. முற்றுகை போராட்டம் நிலைமை தீவிரமடைவதை கண்டதும், போராட்டக்காரர்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து பேசியிருக்கலாமே? நிலைமை இந்தளவுக்கு வந்திருக்காதே?
19. தமிழகத்தில்தானே ஆலை உள்ளது. தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த ஆலை மூடப்பட்டுவிட்டது என்று சொல்லி ஆலைக்கு சீல் வைத்திருக்கலாமே?
20. ஆலையை பாதுகாக்க ஏன் இவ்வளவு மும்முரங்கள்? யாரை பாதுகாக்க இந்த காவு வாங்கும் நடவடிக்கை?
21. கையில் அதிகாரங்கள் கிடைத்தால் போராட்டத்தை ஒடுக்கத்தான் தோன்றமா? பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம் என ஏன் முடிவு செய்யவில்லை?
22. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ள நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார்கள் எப்படி உள்ளே நுழைந்திருக்கிறார்களே?
23, பல உயிர்களை கொன்று குவித்த பாகிஸ்தான் தீவிரவாதி என்று சொல்லப்பட்ட கசாப்-ஐ கூட 3 வருடங்கள் கழித்துதான் தூக்கிலிட்டார்கள். போராடிய மக்களை ஒருநொடியில் சுட்டு பொசுக்கியது என்ன நியாயம்?
24. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நேற்றுமுன்தினம் இரவில் முடிவு செய்து அறிவிக்க யார் காரணம்?.
25. கலெக்டர் அலுவலகம், வாகனங்கள் சூறையாடப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் கூட, பொதுமக்களை சுற்றி வளைத்து குருவியைப்போல் சுட்டு வீழ்த்தியபின்புதானே? அதைதானே வீடியோ ஆதாரம் காட்டுகிறது?
26. யார் அந்த மஞ்சள் டீஷர்ட் போட்டவர்? நேராக மக்களை பார்த்து நெஞ்சில், வாயில் என்று எப்படி சுட்டு தள்ள முடியும்? இது துப்பாக்கி சூடா இல்லை... திட்டமிட்ட என்கவுண்டரா?
27. சோகத்தை, கோபத்தை திசைதிருப்ப இழப்பீடு என்பது ஏற்புடையதா?
28. இந்த வன்முறை சம்பவங்களை இன்றைய குழந்தைகள் பார்த்து கொண்டிருக்கிறார்களே.. அவர்களுக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில் என்ன?
29. துப்பாக்கி சூடு, கலவரத்தை கண்டு இன்றைய குழந்தைகள் நாளை ரவுடிகளாகவும், மூர்க்ககுணம் நிறைந்தும் வளர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
30. எவனோ ஒரு வடநாட்டுக்காரன், ஒரு தனியார் சம்பாதிக்க நம் இனத்தை சுட்டுக் கொள்ள மனம் வந்த கயவர்களின் முகம் எங்கே ஓடி ஒளிந்திருக்கிறது?
இன்னும் ஓராயிரம் கேள்விகள் குடைந்தெடுத்து கொண்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் வெறும் கேள்விகள் அல்ல... மக்களின் வயிற்றெரிச்சல்கள்! வெறும் எண்ணிக்கைகள் அல்ல.. அநீதிக்கு எதிராக திரளும் ஒடுக்கப்பட்டோரின் சாபங்கள்! இனி நாளைய பொழுதை எண்ணி எப்படி ஓட்டப்போகிறோம், பிள்ளைக்குட்டிகளை எப்படி தெருவில் நடமாடி விட்டு வளர்க்க போகிறோம் என்று விழிபிதுங்கி பயங்களை மூட்டை மூட்டையாக சுமந்துகொண்டு தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான் சாமான்யன்... இதற்கெல்லாம் விடை கிடைக்குமா?