உரிமைக்காக குரல் கொடுத்தால் வாயில் வைத்து சுடுவதா.. கொதிக்கும் மக்கள்!
எப்படிதான் போராடி நியாயம் கேட்பது என்று மக்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்தை புனிதமான மதித்த நாடு தமிழகம். நமது பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற ஆயிரம் நம்பிக்கைகளுடன் அடியெடுத்து வைக்கக்கூடிய இடம்தான் ஆட்சியர் அலுவலகம். அதேபோல, அரசியல்வாதிகளை நம் மக்கள் எந்த அளவு மனதில் வைத்திருக்கிறார்களோ தெரியாது,
ஆனால் கலெக்டர் என்றாலே ஒரு தனி மரியாதை கொடுத்துதான் பழக்கப்பட்டவர்கள். அதற்கு காரணம் அரசியல்வாதிகளைவிட அவர்கள் மீதுள்ள நம்பிக்கைதான். படித்த படிப்புக்கு கொடுக்கும் கண்ணியமும்கூட.
ஆனால் நேற்று நடந்த சம்பவம் ஆட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலகம் மீதான நம்பிக்கையை அங்கு நடந்த துப்பாக்கி சூட்டுடன் சேர்த்து பொசுக்கி போட்டுவிட்டது. படுபயங்கரமான சம்பவம் அரங்கேற அந்த புனித இடமே முதல்களமாக வித்திட்டிருக்கிறது.
கொடுங்கோலின் உச்சக்கட்டம்
போராட்டம் என்றாலே அதனை கலைக்க தடியடி நடத்தப்படும், பிறகு கண்ணீர் புகை வீசப்படும். பிறகு தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டம் கலைக்கப்படும், ஒன்றுக்கும் வேலையாகவில்லையா? கூண்டோடு கைது செய்துகொண்டு போய் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்படும். இதுதானே காலம்காலமாக நம் நாட்டில் நடந்து வருகிறது. இதை மனதில் வைத்துதானே நேற்றும் நம் மக்கள் முற்றுகை போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள்? மனித உயிர்களை கொல்லும் அதிகாரம் யாருக்குமே இல்லையே... உயிர்கள் கொல்லப்படும் என்று தெரிந்தும் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்திருப்பார்கள்? ஒரு பெண்ணின் வாயில் வைத்து சுட்டிருக்கிறார்களே.. லட்ச லட்சமாய் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை ராணுவத்தினரை விட மிகவும் கொடூரமானதல்லவா இது... வாயில் வைத்து சுட்டுக்கொன்ற செயல், கொடுங்கோலின் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடு!
யாரைத்தான் கேள்வி கேட்பது?
ஸ்டெர்லைட்டையும் மூடாமல், டாஸ்மாக்கையும் மூடாமல், நியூட்ரினோவையும் நிறுத்தாமல், நீட்டையும் விலக்காமல், தண்ணீரையும் பெற்றுத்தராமல், அவ்வளவு ஏன் எஸ்.வி.சேகரை கூட கைது செய்யாமல் இப்படி இஷ்டப்படி ஆட்சிசெய்வது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? இதை எப்படி ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? உசுப்பேத்தும் காரியங்களை அரங்கேற்றிவிட்டு குளுகுளு அறையிலிருந்து கண்டனங்களை எல்லாருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்களே? யாரைதான் போய் கேள்வி கேட்பது?
பிணத்தை வைத்து அரசியலா?
பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதே நம் தமிழகத்தில் ஒரு வழக்கமாக போய்விட்டது. அப்பாவி மக்களின் பிணம்தான், அரசியல்வாதிகளின் மூலதனமே! மக்கள் கூட்டத்தை தவறாக பயன்படுத்தும் இயக்கங்கள் வேறு பெருகி கிடக்கின்றன. அனல்பொறிக்கும் வார்த்தைகளை பேசி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு, மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அவர்களின் ரத்தம் சூடேற்றப்பட வைத்துவிட்டு, அந்த சூட்டில் குளிர்காய நினைக்கும் சில அரசியல்வாதிகளின் வெற்றுக்கூச்சல்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இவை எல்லாமே சேர்ந்து இன்று 17 வயது மாணவி உட்பட 12 பேரை காவு வாங்கியுள்ளது. பேசாமல் மக்களே தங்கள் பிரச்சனைகளை தாங்களே பார்த்துக் கொண்டால் இந்த தலைவலி இல்லையே? உணர்வுகளில் விளையாடி சீண்டி கொண்டிருக்கும் சில அரசியல் தலைவர்கள் மக்களைவிட்டு ஒதுங்கி போனால் புண்ணியமா போகுமே? இப்படி உயிர்பலி வரை அவர்களை கொண்டு செல்ல வேண்டாமே?
துப்பாக்கி சூடு அல்ல... கொலை!
ஒரு பொதுவான கேள்வி. இரண்டு பேருக்கு சண்டை வருகிறது. எதிரியை ஒருவர் சுட்டு கொன்றுவிடுகிறார் என்று வைத்து கொள்வோம். அவருக்கு என்ன தண்டனை வழங்கும் இந்த சட்டம்? அது கொலைதானே? அவர் கொலையாளிதானே? ஆயுளோ, தூக்கோ எதுவானாலும் கொலைக்கான தண்டனைதானே? அதேபோலதான் இதுவும். அதிகாரத்தை வைத்து உயிர்பலி அரங்கேற்றினாலும் அதுவும் கொலைக்கு சமம்தான். இதுபோன்று அதிகாரம் இருக்கும் தரப்பில் செய்யப்படும் எல்லா தவறுகளுக்கும் விசாரணை என்று ஒன்று வைப்பது முதலில் மாறப்பட வேண்டும். கொலைக்கான தண்டனையைதான் இன்று கையில் துப்பாக்கி ஏந்திய ஒவ்வொரு காவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் மீது குருவி சுடுவதை போன்று சுட்டார்கள் என்று இந்த வாசகத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையில்தான் படித்திருக்கிறோம். ஆனால் அது இன்று நம் கண்முன்னே நிகழும் என்று யாருமே கனவில் கூட எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். இதுவும் ஒருவகை ஜாலியன் வாலாபாக் படுகொலைதான், இதுஒரு கீழ்வெண்மணி படுகொலைதான் என்பதை மறுக்க முடியாது.
என்ன சொல்ல வருகிறீர்கள்?
இது ஜனநாயக நாடு என்பதும் போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாதா?ஆரோக்கிய வாழ்வை தேடி போராடினால் உயிரையேவா காவு வாங்குவது? இப்படி துப்பாக்கி சூடு மூலம் இந்த அரசு என்ன சொல்ல வருகிறது? இனி எதற்கும் போராடக் கூடாது என்று சொல்ல வருகிறார்களா? யாராவது உரிமை, கோரிக்கை என்று வந்து வாயே திறக்க கூடாது என்று சொல்ல விரும்புகிறார்களா? மீறி அராஜகம் நடைபெற்றால் அரசு சார்பில் கொடுத்த இழப்பீட்டை வாங்கிக் கொண்டு நடையை கட்டுங்கள் என்று சொல்ல விரும்புகிறார்களா? அப்படியென்றால் எப்படி போராடுவது என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும். தங்கள் உரிமையை மீட்டெடுக்க ஒரு குடிமகன் எந்த வகையில் போராட்டம் நடத்தினால் உயிருக்கு உத்தரவாதம் தருவீர்கள் என்பதை அறுதியிட்டு சொல்லுங்கள். இல்லையென்றால், பொதுமக்கள் உரிமைக்காக போராடுவது குறித்து அரசியல் திருத்தங்களில் மாற்றம் செய்வீர்களா என்று அதையாவது சொல்லுங்கள். போராடினாலே சுடுகாடுதான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
சாதுர்யாம் கலந்த போர்க்குணம்
தீய சக்திகளை அடையாளம் கண்டு வெறுத்தொதுக்க வேண்டிய கடமை மக்களுக்கும் உண்டு. இல்லையென்றால் தமிழகம் மற்றொரு காஷ்மீராக முற்றிலும் மாறிவிடும். இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் இந்த ஜனநாயகத்தை நாம் இழக்க நேரிடும். மக்களின் உணர்வுகளை மதிக்காத, அவர்களின் கூக்குரல் கேட்காத, பிரச்சனையை தீர்த்து வைக்காத, எந்த ஒரு அரசும் வீழ்ந்ததாகத்தான் வரலாறு. அப்படி ஒருநாள் ஒட்டுமொத்த சக்தியும் ஒன்று திரண்டால் சமூகத்தின் மொத்தக் கயமையும் பொசுங்கக்கூடும். புரட்சி வெடித்தால்தான் ஒரு தீர்வு வந்து சேரும். புரட்சி என்பது மரத்தில் விழும் ஆப்பிளல்ல என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அத்தகைய புரட்சியை நாம் தான் விழ செய்ய வேண்டும். முதலமைச்சர், துணை முதமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர் இந்த ஐந்து பேரும் மக்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்! மக்களின் பொசுக்கும் வயிற்றெரிச்சலிலிருந்து என்றுமே தப்ப முடியாது. தமிழகத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்த சாபக்கேட்டை நாம் சகிப்புத்தன்மையோடும், சாதுர்யம் கலந்த போர்க்குணத்தோடும் மக்களை திரட்டி விழிப்படைய செய்வதுதான் இதற்குரிய ஒரே தீர்வு!