10 ஆண்டுகள் போராட்டம்.. தடகள வீராங்கனை சாந்தி பெற்றார் நிரந்தர பணி நியமன ஆணை
10 ஆண்டு காலப் போராட்டத்திற்கு பலனாக தடகள வீராங்கனை சாந்திக்கு பயிற்சியாளர் பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது.
சென்னை: சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றும் எந்த வித அங்கீகாரமும் இன்றி மீண்டும் கிராமத்தின் உள்ளே சூளை வேலையில் தள்ளப்பட்ட தடகள வீராங்கனை சாந்தியின் 10 ஆண்டு காலப் போராட்டத்திற்கு பிறகு இன்று பயிற்சியாளர் நிரந்தர பணி நியமன ஆணையை தமிழக அரசு அவருக்கு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தையல்காரராக இருக்கும் அவரது தந்தை சௌந்தராசனுக்கு கிடைத்த சொற்ப பணத்திலேயே குடும்பம் வறுமையுடன் சென்று கொண்டிருந்தது. வறுமை குடும்பத்தை வாட்டினாலும் துணிச்சலான பெண் சாந்தி தனது தாத்தாவின் தூண்டுதலின் காரணமாக தடகள வீராங்கனையாக பயிற்சி பெற்றார்.
சத்தான உணவு, போட்டிகளில் போட்டுக் கொண்டு ஓடக்கூடிய ஷூ என எதுவும் இல்லை என்றால் என்ன? சாந்திக்கு இருக்கும் உறுதிதானே மூலதனம். எந்தவிதமான குறைபாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தடகள போட்டிகளில் கலந்து கொண்டார்.
கத்தாரில் கெத்தாக விளையாடிய சாந்தி
2006ம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி. இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சாந்தி, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அந்த நாள் தமிழகத்தின் முக்கியமான நாளானது. அந்த வெற்றிக் காணக் கூட அவரது குடும்பத்தாரால் முடியவில்லை. வறுமையின் காரணமாக அவர்கள் வீட்டில் டிவி இல்லை. இந்த வெற்றிக்காக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சாந்திக்கு டிவி மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பிடுக்கப்பட்ட கவுரவம்
சாந்தியின் வெற்றிக்கு பின்னர், அவரது பாலினம் குறித்து தவறான செய்திகள் வெளியாகின. இதனால் சாந்தி வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது. சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்ற சாந்தி கிராமத்தோடு முடக்கப்பட்டார்.
சூளையில் வேலை
ஏற்கனவே வறுமை துரத்திய சாந்திக்கு மேலும் மேலும் சிக்கல் அதிகமானது. இதனைத் அடுத்து, சாந்தி தனது குடும்பத்தின் வறுமையை போக்க செங்கல் சூளையில் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றாலும் அவரை வறுமையும் துயரமும் தொடர்ந்து துரத்தியது.
தொடர் போராட்டம்
இதனையடுத்து, அரசு சார்பில் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கினார் சாந்தி. 10 ஆண்டுகள் நடத்திய அவரின் போராட்டத்தின் ஒரு பகுதி வெற்றியாக தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை கிடைத்தது.
நிரந்தரப் பணி ஆணை
இதனைத் தொடர்ந்து தற்போது சாந்திக்கு தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் தடகள பயிற்சியாளராக நிரந்தர பணி கிடைத்துள்ளது. அதற்கான அரசாணையை சாந்தியிடம் தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது. சாந்தி தன் வலிமையான பயிற்சியால் பல புதிய திறம் வாய்ந்த வீரர்களை உருவாக்குவார் என்று நம்புவோம்.