போலி ஏடிஎம் கார்டு தயாரித்த நான்கு பேர் கும்பல்- சென்னையில் கைது
சென்னை: சென்னையில் போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் கேரள மண்டலத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி அசோக்குமார் கொடுத்த மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஏ.டி.எம் கார்டு தயாரிப்பின் முக்கிய குற்றவாளி, சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். போலி ஏ.டி.எம் கார்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளியை அந்த வீட்டில் மடக்கிப்பிடித்தனர்.
அவரது பெயர் ஆனந்தன் என்ற ரூபன். இலங்கையில் கொழும்பு நகரத்தைச் சேர்ந்த இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அந்த வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் மடிப்பாக்கத்தில் அந்த வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார்.
பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் போலி ஏ.டி.எம் கார்டு தயாரிப்பதில் நிபுணர். இவர் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரையில் போலி ஏ.டி.எம் கார்டு தயாரிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.
இவரது கூட்டாளிகள் ஸ்ரீதிசோக்குமார், தினேஷ்குமார், கிருஷ்ணதாஸ் என்ற முருகன், தஸ்லின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தஸ்லின் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
மற்ற 3 பேர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ரூபனுக்கு வெளிநாடுகளில் நிறைய ஏஜெண்டுகளும், நண்பர்களும் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வாழும் வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, அவற்றின் தகவல்களை இணையதளம் மூலம் ரூபனுக்கு அனுப்பி வைப்பார்கள்.
ரூபன் அந்த ரகசிய தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, எண்கோடர் எந்திரம் மூலம் போலி ஏ.டி.எம் கார்டுகளை தயாரித்துள்ளார். பெரும்பாலும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்களை பயன்படுத்தியே போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தயாரித்து வைத்திருந்த சுமார் 50 ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை ஏ.டி.எம். மையங்களில் இருந்து சுருட்டி உள்ளனர். அதன் மூலம் ஒரு இன்னோவா சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள்.
மோசடி கும்பலைச் சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட போலி ஏ.டி.எம் கார்டுகள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.