சென்னையில் ஒருசில ஏடிஎம்கள் மட்டுமே செயல்படுகின்றன.. ரூ.100 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும்
சென்னையில் ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே இயங்கத் தொடங்கி இருக்கின்றன. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் ஏடிஎம் மையங்கள் முன்பு காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை: சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விடத் தொடங்கியுள்ளனர். என்றாலும் எல்லா ஏடிஎம்களும் திறக்கப்படவில்லை. ஒருசில மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் திறந்திருக்கும் ஏடிஎம் மையங்கள் அல்லாமல் மூடி இருக்கும் ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுக்க காத்திருக்கின்றனர்.
இந்தியா முழுவதும 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் கையில் பணம் இருந்தும் யாராலும் செலவு செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், நேற்றில் இருந்து வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, நேற்று வங்கிகளுக்கு மக்கள் சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். 4000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றம் செய்த போது 1000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொடுக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் மக்கள் அன்றாட அவசர செலவுகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்றிலிருந்து ஏடிஎம்கள் மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் காலை 7 மணியில் இருந்து மக்கள் ஏடிஎம் மையங்களின் வாசல்களில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் பல இடங்களில் இன்னும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படவில்லை.
எனினும், சென்னையில் இன்னும் பல இடங்களில் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பல மையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஒவ்வொரு மையமாக திறக்கப்பட்டு வருவதாகவும் மாலைக்குள் அனைத்து ஏடிஎம் மையங்களும் முழுவதுமாக செயல்படத் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.