ஏடிஎம் குளோனிங்: பல கோடிகளை அசால்ட்டாக கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள்.. சென்னையில் தொடரும் பயங்கரம்!
சென்னை: ஏடிஎம் குளோனிங் மூலம் பணத்தை திருடும் முறை சென்னையில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
இந்த கொள்ளையடிக்கும் முறை மூலம் பல நூறு கோடிகள் திருடப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த திருட்டில் இப்போது 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் குளோனிங் முறை கொள்ளையடிப்பு மிகவும் வித்தியாசமாகவும், எளிதில் கண்டுபிடிக்க முடியாததாகவும் உள்ளது.
முதலில் ஹேக் செய்வார்கள்
ஏடிஎம் குளோனிங் முறையில் முதற்கட்டம் ஹேக் செய்வது. முதலில், ஒரு வங்கியின் சர்வரை ஹேக் செய்து அதில் கணக்கு வைத்து இருப்பவர்களின் விவரங்களை எடுப்பார்கள். பின் அதிலிருந்து ஏடிஎம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் விவரங்களை எடுப்பார்கள். இதுதான் இந்த கொள்ளைக்கு தொடக்கம். ஹேக்கிங் தெரிந்த நபர்கள் இந்த மோசடியை செய்கிறார்கள்.
குளோன் செய்வார்கள்
பின் அந்த விவரங்களை வைத்து இவர்களே புதிய ஏடிஎம் கார்டுகளை உருவாக்குவார்கள். உதாரணமாக, நம்முடைய பின் நம்பர் விவரங்களை முன்கூட்டியே ஹேக் செய்து அவர்கள் எடுத்து இருப்பார்கள். அதன்பின், புதிய கார்ட் ஒன்றை உருவாக்கி, அதில் நம்முடைய ஏடிஎம் கார்டின் விவரங்களை ஏற்றிவிடுவார்கள். அதவாது, ஒரே வங்கி அக்கவுண்டிற்கு ஒரே மாதிரி இரண்டு ஏடிஎம் கார்ட். ஒன்று நம்மிடம் இருக்கும், இன்னொன்று ஹேக்கரிடம் இருக்கும்.
திருடுவது நடக்கும்
பின் இதை வைத்து திருட தொடங்குவார்கள். இங்குதான் அவர்கள் மூளை வேலை செய்கிறது. சாதாரண ஏடிஎம்களில் சென்று திருடாமல், வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு இந்த பணத்தை அனுப்புவார்கள். ஆனால் அப்படி ஒரு கணக்கே உண்மையில் இருக்காது. இது போலியான கணக்கு என்று போலீஸ் நிரூபிக்கவே பல வருடம் ஆகும். இதனால் எளிதாக பணத்தை திருடிவிட்டு கொள்ளையர்கள் எஸ்கேப் ஆவது வழக்கமாக உள்ளது.
சென்னையில்
அந்த வகையில் இவர்கள் சென்னையில் பல சிட்டி யூனியன் வங்கிகளில் இப்படி கொள்ளையடித்து இருக்கிறார்கள். கடந்த டிசம்பரில் நடந்த கொள்ளைக்கு இப்போதுதான் முடிவு வந்துள்ளது. இந்த கொள்ளையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் ஏடிஎம் கார்ட் தயாரிக்கும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது
இவர்கள் ஏற்கனவே புனேவில் காஸ்மோஸ் வங்கியில் இதேபோல் குளோனிங் செய்து கொள்ளையடித்து இருக்கிறார்கள். இவர்கள் சுமார் 100 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இன்னும் எங்கு எல்லாம் கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.