போனில் ஏ.டி.எம் விவரம் கேட்ட பிராடு ஆசாமி - கேள்வி கேட்டு திணறடித்த வியாபாரி
தன்னிடம் போனில் ஏடிஎம் விபரங்களைக் கேட்ட ஆசாமியை வியாபாரி ஒருவர் திணறடித்தார்.
நாகர்கோவில் : தன்னிடம் போனில் ஏ.டி.எம் விவரங்களைக் கேட்ட ஆசாமியை விவசாயி ஒருவர் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து இருக்கிறார்.
நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். காவல்நிலையம் எதிரே ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
இவருக்குப் நேற்று போன் செய்து ஏ.டி.எம் எண்ணைக் கேட்ட மர்ம ஆசாமியை அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தார். வழக்கம் போல் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் நாகராஜன் கடையைத் திறந்தார். தொடர்ந்து கடையில் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், தன்னை விஜயகுமார், ஏடிஎம் ஆபீஸர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
அதன் பிறகு உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விடும் நிலையில் உள்ளது. அதைப் புதுப்பிக்கவேண்டும் அதற்காக உங்கள் ஏ.டி.எம் கார்டின் பின்னால் உள்ள 16 இலக்க நம்பரை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
நாகராஜனுக்கு பத்திரிகைகளில் வந்த மோசடி செய்திகள் மற்றும் காவல்துறையின் எச்சரிக்கை அறிவிப்புகள் நினைவுக்கு வந்தது. இதையடுத்து அவர் உஷாரானார்.
போனில் பேசிய நபரிடம், நான் ஏன் உங்களிடம் ஏடிஎம் நம்பரை தெரிவிக்க வேண்டும். எனது ஏடிஎம் கார்டின் நிலை குறித்து வங்கியில் நேரடியாக சென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதற்கு அந்த நபர் நீங்கள் இங்கு வந்தாலும் என்னைத் தான் சந்திக்க வேண்டி இருக்கும்.உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்றும் கேட்டுள்ளார்.
நீங்கள் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்? எந்த வங்கியை சேர்ந்த ஏடிஎம் அதிகாரி? என்று சரமாரியாக கேள்வி கேட்டார் நாகராஜன். இவரது அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அந்த நபரால் பதில் சொல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து அந்த நபர் போனை துண்டித்து விட்டார்.
இருப்பினும் பேசியவர் உண்மையிலேயே வங்கி அதிகாரிதானா? அல்லது போலி நபரா? என்பதை அறியும் வகையில் நாகராஜன் தொடர்ந்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நபர் போலி என்பதும், ஏடிஎம் பணத்தை அபேஸ் செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தமிழகத்தில் தற்போது ஏ.டி.எம் மோசடி அதிகளவில் அதிகரித்து உள்ளது. வடமாநில ஆசாமிகள் போல வித்தியாசமான தமிழில் பேசும் நபர்கள் பலரையும் ஏமாற்றி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.