ஏ.டி.எம் கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ் !
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஏ.டி.எம் கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
கோவை: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கோவையைச் சேர்ந்த வியாபாரி தனது மகளின் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து அசத்தியுள்ளார்.
கோவை மாவட்ட உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (54). இவர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஆயிஷாவுக்கும் நவீத் என்பவருக்கும் அடுத்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழை முபாரக் வித்தியாசமான முறையில் வங்கி ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து அசத்தியுள்ளார்.
அந்த ஏடிஎம் கார்டு திருமண அழைப்பிதழில் மணமகன், மணமகள் பெயர், திருமண தேதி, இடம் போன்றவை குறித்த தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவே இதுபோன்று அச்சடித்துள்ளதாக முபராக் கூறினார் .
மேலும், ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழை தனது உறவினார்கள் மற்றும் நண்பர்களிடம் அவர் அளித்து வருகின்றார் .இந்த அழைப்பிதழைப் பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.