5 நாட்களாக மூடப்பட்டிருக்கும் ஏடிஎம்கள்... பணம் எடுக்க முடியாமல் திணறும் பொதுமக்கள்
5 நாட்களாக தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை: ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
நாடு முழுவதும் திடீரென ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்காகவே ஏடிஎம்கள் 2 நாட்கள் மூடப்பட்டன. ஆனாலும் ஏடிஎம் மையங்கள் முழு அளவில் இன்னமும் செயல்படவில்லை. இதனால் நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களை நோக்கி பொதுமக்கள் அலைவது தொடர் கதையாகி வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை எனினும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிகளில் இன்றும் கூட்டம் அலைமோதியது.
அதே நேரத்தில் தொடர்ந்து 5-வது நாளாக பல ஏடிஎம் மையங்கள் இன்றும் மூடப்பட்டே இருக்கின்றன. இதனால் அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரிசர்வ் வங்கிக்கும் சென்று பணத்தை மாற்ற முயன்ற பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏடிஎம் மையங்கள் எப்போது முழுமையாக செயல்படும் என்பதுதான் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.