மூடிக் கிடக்கும் ஏடிஎம்கள்: கையில் பணம் இல்லாமல் அல்லாடும் மக்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏடிஎம் மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் கையில் இருக்கும் சேமிப்பு பணம் முழுவதையும் வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
டெபாசிட் செய்யும் பணத்தை அன்றாட அத்தியாவசிய தேவைகள், மருத்துவ செலவுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கு சென்றால் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2 ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் போதும் என்ற நினைப்பில் ஏடிஎம்களுக்கு செல்கின்றனர். ஆனால் இரண்டு வாரம் கடந்த நிலையிலும் ஏடிஎம்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடியே கிடக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஏடிஎம் மையத்திற்கும் ஏறி இறங்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஒரு சில ஏடிஎம்களில் பணம் இருக்கும் போதிலும் அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. அதற்கும் சில்லறை கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.