அரசு கேபிள் அலுவலகம் மீது தாக்குதல்.. பாலிமர் டிவி எம்.டி. மீது போலீஸ் அதிரடி வழக்கு!
சேலம்: சேலத்தில் அரசு கேபிள் டிவி கழக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி பாலிமர் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலிமர் டிவி நிர்வாக இயக்குநர் பி.வி. கல்யாணசுந்தரம் மற்றும் 14 பேர் மீது இந்த வழக்குப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று சேலத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கழக அலுவலகத்திற்கு முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் போராட்டம் நடைபெற்றது. சரியான முறையில் சிக்னல் கிடைப்பதில்லை என்று கூறி இந்தப் போராட்டம் நடந்தது.
அப்போது திடீரென ஆபரேட்டர்களில் சிலர் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினர். இதில் பல கருவிகள் சேதமடைந்தது. இதுகுறித்து சிறப்பு தாசில்தார் காஜா மைதீன் பேர்லேன்ட்ஸ் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸார் கல்யாணசுந்தரம் மற்றும் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.