தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சி பேரணியில் போலீசார் தடியடி- சீமான் கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் கொடூரமானது என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணியின் போது, தொண்டர்களை மரக்கட்டைகளால் தாக்கிய காவல்துறையை ஆளும் வர்க்கத்தின் கூலிப்படை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி நேற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியிலிருந்து சங்கரப்பேரி வரையிலான 8 கி.மீ. தூரத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர்.
அப்போது சில தொண்டர்கள் சாலையோரம் நின்று 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களைக் கண்டிக்கவே காவல்துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடூரமான தாக்குதல்
அப்போது அங்கிருந்த மரக்கட்டைகளை எடுத்து காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களைத் தாக்கி உள்ளனர். இந்த சம்பவ குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தூத்துக்குடியில் நடைபெற்ற 22வது மாநில மாநாட்டின் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களைக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய தமிழகக் காவல்துறையினரின் செயல்பாடானது வன்மையான கண்டனத்திற்குரியது. அச்செயலுக்கு எத்தகைய நியாயம் கற்பிக்க முயன்றாலும் அது ஏற்கக் கூடியதல்ல.
நோக்கம் கொண்ட செயல்
பொதுவுடமை இயக்கங்கள் எப்பொழுதுமே மிகுந்த நெறியோடு மக்களுக்கு இடையூறில்லாமல் அரசியல் கூட்டங்களை நடத்துபவர்கள் அப்படிக் காவல்துறையினரின் அனுமதியோடு நடத்தப்பட்ட தோழர்களின் பேரணியைக் கலவரக் களமாக்கியிருப்பதன் மூலம் இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டமாக இருக்குமோ என்கிற ஐயம் நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஒரு கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்குதன் மூலம் அம்மாநாட்டின் நோக்கத்தினையும், வெற்றியினையும் திசைதிருப்புவதற்கான மதத்துவேச சக்திகளின் திட்டம் ஏதேனும் இதன்பின்னால் ஒளிந்திருக்கிறதா எனவும் ஆராய வேண்டியது அவசியமாகிறது.
அரசபயங்கரவாதத்தின் ஏவல் துறை
இதில் மரக்கட்டைகளைக் கொண்டு தொண்டர்களைத் தாக்கிய காவல்துறையினரின் செயலானது மனிதத்தன்மையேயற்ற காட்டுமிராண்டித்தனமான கொடுஞ்செயலாகும். மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டே பழக்கமாகிப்போன அரசப்பயங்கரவாதத்தின் ஏவல் பணிகளுக்கான ஒரு துறையாகக் காவல்துறை மாறிப்போனது என்பதற்கான சாட்சியம் இதுவாகும்.
ஒரு பேரணியை எவ்வித வன்முறைக்கும் இடங்கொடாவண்ணம் நெறிப்படுத்தி அப்பேரணியில் பங்கேற்போர்க்குப் பாதுகாப்பினை நல்குவதுதான் காவல்துறையினரின் தலையாயக் கடமையாகும்.
கொலைவெறித் தாக்குதல்
அதனை விடுத்து அப்பேரணியில் பங்கேற்றவர்களையே கட்டையால் அடித்து மண்டையைப் பிளந்து கொலைவெறித் தாக்குதல் தொடுப்பது என்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். அப்பேரணியில் பெண்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற அடிப்படை உணர்வோ, மாந்தநேயமோ அற்றுத் தொண்டர்கள் மீது காட்டுமிராண்டித்தாக்குதல் நடத்தியிருப்பது அரக்கத்தனமானது. அதனை மாந்தநேயம் கொண்ட எவராலும் ஏற்க முடியாது. இதன்மூலம் ஆளும் வர்க்கத்தின் கூலிப்படையாகத்தான் காவல்துறை மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை புலனாகிறது.
சிகிச்சை செலவுகளை ஏற்கவேண்டும்
அண்டை மாநிலமான கேரளத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களும் பங்கேற்கும் ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வன்முறைக்களமாக மாற்றியிருக்கும் தமிழகக் காவல்துறையினரின் செயலால் தமிழகம் இழுக்கையும் அவப்பெயரையுமே தந்திருக்கிறது. ஆகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டைச் சீர்குலைக்கும்விதமாகப் பேரணியில் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.