ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.
இதனைத்தொடர்ந்து மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு, அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் குதித்து, பிடித்து வைத்திருந்த மீன்களைகடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
பின்னர், சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக தீயை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.
கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.