பொட்டு சுரேஷ் கொலை வழக்கு.. சிறையில் இருந்த அட்டாக் பாண்டிக்கு உடல் நலக்குறைவு
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அட்டாக் பாண்டி உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் 'பொட்டு' சுரேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சராகவும், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும் இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த இவரை கடந்த 2013 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, பின்னர் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மஞ்சள் காமாலை, நுரையீரல் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்த அட்டாக் பாண்டிக்கு கடந்த சனிக்கிழமை இரவு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் மேலும் சில நாட்கள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் மேல்சிகிச்சைக்கு சிறை மருத்துவமனை நிர்வாகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அழைத்து வரப்பட்டார்.
அவரை பரிசோதித்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய கூறியதை தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது.