அட்டாக் பாண்டி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஹைகோர்ட் மதுரை பெஞ்ச்
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர் சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ். இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரை டி.வி.எஸ். நகர் அருகில் உள்ள சத்யசாய் நகரில் தனது வீட்டுக்கு காரில் வந்தபோது மர்ம கும்பலால் வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து
குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு, சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் விதிமுறைகளை பின்பற்றாமல் தனது கணவர் உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவக்குமார் மற்றும் ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.