பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: ‘அட்டாக்’ பாண்டி முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு
சென்னை: பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ‘அட்டாக்' பாண்டி முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக்கொலை தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அட்டாக்பாண்டியின் உறவினர் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதில் சபாரத்தினம், சந்தானம், ராஜா என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக் ஆகிய 7 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதி ஏழுபேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டியை போலீசார் தேடி வந்தனர். அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அட்டாக்பாண்டியை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில் அட்டாக்பாண்டி முன்ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொட்டு சுரேஷ் கொலைக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அந்த கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று, நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அட்டாக்பாண்டிக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அட்டாக்பாண்டி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் விரோதம் காரணமாக, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், அட்டாக்பாண்டி சம்மந்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அட்டாக்பாண்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலையேந்திரன் கூறுகையில், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதாட இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு நீதிபதி பிரகாஷ் தள்ளிவைத்தார்.