நீ பெரிய வீரன்னு சொன்னாங்க… கட்டிலுக்கு கீழே பதுங்கின அட்டாக் பாண்டியை கிண்டலடித்த போலீஸ்
மதுரை: வீராதி வீரான்களாக காட்டிக்கொள்ளும் ரவுடிகள் எல்லாம் என்கவுண்டர் என்றால் உயிர் பயத்தில் வெலவெலத்துதான் போகிறார்கள் இதில் அட்டாக் பாண்டி மட்டும் விதிவிலக்கா என்ன?
அட்டாக் பாண்டியை கடந்த 21ம் தேதி மும்பையில் கைது செய்த போலீஸ் அங்கு நடந்த சம்பவங்களை கதை கதையாக கூறுகிறார்கள்...
நான் கத்தி எடுத்தா ரத்தம் பாக்காம வைக்க மாட்டேன் என்று உதார் விட்டு திரிந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் கொலைக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகாலம் தலைமறைவாக இருந்தார். மும்பை அருகே பதுங்கியிருந்த அட்டாக் பாண்டியை கடந்த 21ம் தேதி சுற்றி வளைத்தது போலீஸ்.
அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்த பின்னர் அறையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த போது அட்டாக் பாண்டியை காணாமல் அதிர்ந்துதான் போனது போலீஸ். அறைக்குள் கட்டிலுக்கு கிழே அட்டையைப் போல பதுங்கிக்கொண்டானாம் அட்டாக். கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்த போது பிணம் போல கிடந்தானாம் அட்டாக். அவனது கால்களில் கயிற்றைக் கட்டி வெளியே இழுத்த போது... என்னை சுட்டுறாதீங்க... நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் என்று கதறி அழுதானாம். நீ வீரன்னு நினைச்சோம்... இப்படி கட்டிலுக்கு கீழே பதுங்கி கிடக்கிறயே என்று கிண்டலடித்த போலீஸ் அவனை அள்ளிக்கொண்டு வந்து கஸ்டடியில் வைத்து விசாரித்துள்ளனர்.
அழகிரி அப்செட்
அட்டாக்' பாண்டி கைதான நாளிலிருந்து அழகிரிதான் அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ‘பொட்டு' சுரேஷின் கொலை வழக்கில் தன்னையோ, தன் மகனையோ சிக்கவைத்து, போலீஸ் வேலையை காட்டுவார்களோ என்ற அச்சம்தான் அவரை வாட்டி வருகிறது. ‘அட்டாக்' பாண்டி போலீஸ் விசாரணையில் என்னென்ன சொல்லியிருக்கிறார் என்பதும் தெரியாமல் குழம்பிப் போயுள்ளார்.
மீண்டும் விசாரணை
செப்டம்பர் 27 மாலையுடன் நான்கு நாள் போலீஸ் கஸ்டடி முடிந்து, ‘அட்டாக்' பாண்டியை ஆஜர்படுத்த 2-வது விரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன்பு ஆஜர் படுத்திய போலீஸ், அட்டாக்' பாண்டியை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.
விசாரணை வளையத்தில்
மும்பை, டெல்லி, உ.பி., ராஜஸ்தான் என்று வட மாநிலங்களில் தங்கியிருந்த காலங்களில் லட்சக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதை யார் அனுப்பினார்கள் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறியதோடு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அணியிலிருந்து ஸ்டாலின் அணிக்கு ‘அட்டாக்' பாண்டி மாறிய காரணம் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
அழகிரி – துரை தயாநிதி
அழகிரியின் மகன் துரை தயாநிதியை சென்னை தி.நகர் ஹோட்டலில் அட்டாக் பாண்டியைச் சந்தித்துப் பேசியது குறித்தும், அப்போது அவரிடம் அட்டாக் வைத்த கோரிக்கைகள் பற்றியும், ‘பொட்டு' சுரேஷ், தி.மு.க பிரமுகர் உதயகுமார் மூலம் ‘அட்டாக்'கின் உறவினர் திருச்செல்வத்துக்கு பணம் கொடுத்து ‘அட்டாக்' பாண்டியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்களா என்பதைப் பற்றி விசாரிக்கவும் கூடுதலாக நான்கு நாட்கள் வேண்டும்" என்று போலீசார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாளை சிறையில் அட்டாக்
இதற்கு அட்டாக் பாண்டியின் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அட்டாக் பாண்டியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி பாரதிராஜா, மீண்டும் போலீஸ் காவல் தொடர்பான மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அட்டாக் பாண்டி நெல்லை கொண்டு செல்லப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்டாலின் அணியில் அட்டாக்
அட்டாக் பாண்டி ஸ்டாலின் அணிக்கு மாற காரணம் மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமியும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனும்தானாம். இந்த சந்திப்பு பற்றியும், அப்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் அட்டாக் பாண்டியிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனையடுத்து ஸ்டாலின், மா.சுப்ரமணியன், குருசாமி ஆகியோரையும் போலீசார் விசாரிக்க உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ அட்டாக் பாண்டி அரெஸ்ட் திமுக வட்டாரத்தில் ஒருவித கலவரத்தை கிளப்பியிருப்பது என்னவோ உண்மை என்கின்றனர்.