மும்பையில் சிக்கிய 'அட்டாக்' பாண்டியை பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டுவந்தது போலீஸ்!!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்ட மற்றொரு தி.மு.க. பிரமுகரான அட்டாக் பாண்டி விமானம் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரை கொண்டுவரப்பட்டுள்ளார். அவரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்பதால் உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனைவி தயாளு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரையில் மு.க. அழகிரிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி. இதில் அட்டாக் பாண்டி மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி இருவர் மீதும் பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் மதுரையில் பொட்டு சுரேஷ் படுகொலை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அட்டாக் பாண்டியின் உறவினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வந்துள்ளனர்.
ஆனாலும் அட்டாக் பாண்டி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அட்டாக் பாண்டியின் சொத்துகளை முடக்கி தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் அவ்வப்போது சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கண்ணாமூச்சி காட்டி வந்தார்.
அட்டாக் பாண்டி இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் தமிழக போலீசாரால் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் பெலாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 26-ந் தேதி வரை அவகாசம் வழங்கியது அக்கோர்ட். இதனைத் தொடர்ந்து இன்று மதுரை துணை கமிஷனர் சமந் ரோகன் ராஜேந்திரா தலைமையில் விமானம் மூலமாக மதுரைக்கு அட்டாக் பாண்டி கொண்டுவரப்பட்டார்.
தற்போது அட்டாக் பாண்டியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட உள்ளார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், அட்டாக் பாண்டியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அதில் தன் கணவரை போலீசார் என்கவுண்ட்டர் செய்துவிடுவார்கள்; அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழக டி.ஜி.பி, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் தென்மண்டல ஜ.ஜி ஆகியோருக்கும் தயாளு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.