நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. தலைமறைவான வக்கீல் கோர்ட்டில் சரண்
நண்பரை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீல் கோர்ட்டில் சரணடைந்தார்.
தூத்துக்குடி: நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடியில் வக்கீ்ல்கள் சங்க தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த அக்டோபர் மாதம் மகிளா கோர்ட்டில் மோதல் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ரகுராமன் கத்தியால் குத்தப்பட்டார்.
இது தொடர்பாக அவரது நண்பரும் பார் கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு உள்பட 8 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரபுவை தவிர மற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த வக்கீல் பிரபுவை தேடி வந்தனர். தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டு வந்தார்.
உடனடியாக சரண் அடையாவிட்டால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபோவதாக தூத்துக்குடி முதலாவது ஜேஎம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்ததோடு அவர் சரண் அடையவும் அவகாசம் அளித்தது.
இருப்பினும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்த வக்கீல் பிரபு தூத்துக்குடி முதலாவது கோர்ட்டில் மாலை 6 மணி அளவில் சரண் அடைந்தார். அதில் ஏற்கனவே இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டாலும், கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் பிரபுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.