நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ 50 லட்சத்துக்கு ஏலம்.. விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி ஏலம் விடுத்தது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
ஊராட்சி பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஊரில் உள்ளவர்கள் ஒன்று கூடி இந்த ஏலத்தை நடத்தியுள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ 50 லட்சமும், துணைத் தலைவர் பதவிக்கு ரூ 15 லட்சமும் ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தலைவர் பதவிக்கான ஏலத்தை அதிமுக பிரமுகர் சக்திவேல் எடுத்துள்ளார். அது போல் துணை தலைவர் பதவிக்கான ஏலத்தை தேமுதிக பிரமுகர் முருகன் எடுத்துள்ளார். இருவரும் வரும் 15-ஆம் தேதி பணம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.