ஜாமீன் கிடைக்காமல் அல்லாடும் ஆடி கார் ஐஸ்வர்யா.. நாளைக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: ஆடி காரை அதிவேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கி தொழிலாளர் ஒருவரைக் கொன்ற வழக்கில் ஜாமீன் கோரி இளம் பெண் ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நாளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜூலை 2ம் தேதி சனிக்கிழமை இரவு தனது தாயாரின் ஆடி காரில் தோழிகளுடன் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்தார் ஐஸ்வர்யா. தரமணி அருகே கார் அதி வேகமாக வந்துள்ளது. அப்போது சாலையோரமாக நின்றிருந்த தொழிலாளர் முனுசாமி மீது கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்க்தினர் விரட்டிச் சென்று காரை மடக்கி ஐஸ்வர்யாவைப் பிடித்தனர். போலீஸார் வந்து பின்னர் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவர் மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் சிறையில் இருந்து வருகிறார்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
முதலில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் நேரடியாக இங்கு வரக் கூடாது என்று மனு தள்ளுபடியானது. இதையடுத்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார். அங்கு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் ஐஸ்வர்யா.
நீதிபதி சொக்கலிங்கம்
அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.குமார் வாதாடினார்.
அளவாகத்தான் குடித்தார்
அப்போது அவர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறந்த அளவே மது அருந்தியதாகவும், காரை முனுசாமியின் மீது இடித்த பிறகு, தானாக காரை நிறுத்தி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததாகவும் வழக்கறிஞர் குமார் கூறினார். ஆனால் இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆட்சேபனை தெரிவித்தார்.
அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார்
வெங்கட்ரமணி வாதிடுகையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே மருந்து அருந்தியதற்கான ஆதாரம் இருக்கிறது. மேலும், 108க்கு ஐஸ்வர்யா போன் செய்யவில்லை. மாறாக விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவரான சரவணன் என்பவர்தான் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார் என்றார்.
நாளை தீர்ப்பு
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் தீர்ப்பை நாளை அறிவிப்பதாக கூறி வழக்கை நீதிபதி சொக்கலிங்கம் ஒத்திவைத்தார். ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு வலுவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் தடுமாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.