கணக்கில் நான் "ஸ்டேட் பர்ஸ்ட்".. ஜாமீன் கொடுங்க... "ஆடி கார்" ஐஸ்வர்யா கோரிக்கை!
சென்னை: நான் கணக்கில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவள். எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. தேவையில்லாமல் என்னை சிறையில் அடைத்து விட்டனர். எனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடி கார் விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா மனு செய்துள்ளார்.
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையை முனுசாமி என்ற கூலித் தொழிலாளி ஜூலை 2ம் தேதி அதிகாலையில் கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது அதி வேகமாக வந்த ஆடி கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு கார் நிற்காமல் போய் விட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டியவரான சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா வில்டன் என்பவர் சிக்கினார். 26 வயதான அவர் நல்ல குடிபோதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவருடன் காரில் மேலும் சில பெண்களும் இருந்தனர். அவர்களும் குடித்திருந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவர் மது அருந்தியது உறுதிப்பட்டது. பின்னர் அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக மனு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்து விட்டது உயர்நீதிமன்றம். செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போகுமாறு அது உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று செஷன்ஸ் கோர்ட்டில் ஐஸ்வர்யா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த விபத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குடிபோதையில் காரை ஓட்டவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கியதால், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் கணித பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
இந்த மனு நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்யும் விதமாக அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.