ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு: ஹைகோர்ட் மீண்டும் தள்ளுபடி
சென்னை: சென்னை, தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு 2வது முறையாகத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா வில்டன். கடந்த ஜூலை 1-ம் தேதி இவர் பழைய மகாபலிபுரம் சாலையில் கார் ஓட்டிச் சென்றபோது கூலித் தொழிலாளி முனுசாமி மீது மோதியது. இதில் முனுசாமி இறந்தார். ஐஸ்வர்யா மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கடந்த ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஸ்வர்யா குடிபோதையில் காரை ஓட்டவில்லை என்றும், மருத்துவ பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவே ஆல்கஹால் அவரின் உடலில் இருந்ததாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கமுடியாது எனக் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து சென்னை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது.
மருத்துவப் பரிசோதனையில் ஐஸ்வர்யா மது அருந்தியுள்ளது ஊர்ஜிதமாகியுள்ளதாக கூறி அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவித்ததால், அவரது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 15ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஐஸ்வர்யா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.