டி.சி.எஸ். பணி நீக்கத்தின் பின்னணியில் நடப்பது என்ன? ஊழியர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
சென்னை: டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் திடீர், திடீரென பணி நீக்கம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அதிக அனுபவம் கொண்ட, திறமையான ஊழியர்கள், தேவையில்லாமல் பணி நீக்கம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் ஒருவரும், அதிகாரிகளும் உரையாடிக் கொள்ளும் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காரணமேயின்றி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது இந்த ஆடியோ பதிவு.
ஐடி நிறுவனங்களில் கிரேடு
ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களின் வேலைக்கு ஏற்றாற்போல ஏ. பி, சி, டி, இ, என தர மதிப்பீடு வழங்குவார்கள். ஏ, பி என்பது மிகச் சிறந்த தரம்.சி மதிப்பீடு பெற்றால் நிறுவனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்தவர்கள் என்றுஅர்த்தம். டி, இ என்றால் வேலையின் தரம் சரி இல்லை.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது குற்றமா?
ஏ, பி. டி, இ, ஆகிய மதிப்பீடுகள் குறைவாகவே வழங்கப்படும். பெரும்பாலும் சி மதிப்பீடுதான் அதிகம் பேருக்கு வழங்கப்படும். இப்போது வேலைபறிப்புக்கு இலக்காகி இருப்பது சி மதிப்பீடு பெற்றவர்கள்தான். நிறுவனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு 'திறன் மிக்கவர்கள்' என நிறுவனத்தாலேயே சான்று அளிக்கப்பட்டவர்கள் இப்போது அதே நிறுவனத்தால் 'திறனற்றவர்கள்' என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
கால் லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்
இப்படி மொத்தம் 25 ஆயிரம் மென்பொருளாளர்களை வெளியேற்ற டி.சி.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய காரணம் இன்றி, பணியாளரை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பது தொழிலாளர் சட்ட விதிமுறை. ஆனால், ஐடி நிறுவனங்களோ எதை, எதையோ செல்லி வேலையை விட்டு நீக்குகின்றன. கடந்த வாரம்தான், நல்ல ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்த தனது நிறுவனம், மறுவாரமே, உட்காரும் சீட்டை இழுத்து தம்மை கீழே தள்ளுவதை புரிந்துகொள்ள முடியாமல் மன உலைச்சலில் உள்ளனர் ஐடி ஊழியர்கள்.
ரகசிய ஆடியோ பதிவு
இதுபோன்ற ஒரு சம்பவம் சென்னை அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியருக்கும் நடந்துள்ளது. அவர் தனது ஹெச்.ஆர். மேலாளர்களிடம், பணி நீக்கத்திற்கான காரணத்தை கேட்டறிவதையும், அவர்கள் மழுப்பியபடியே பதில் சொல்வதையும் அந்த பெண் ஆடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ இப்போது சோஷியல் நெட்வொர்க் வலைகளில் பரவி வருகிறது. திடீரென வேலையை விட்டு விலக சொன்னதால் அந்த பெண் கம்மியபடியே பேச்சை ஆரம்பிக்கிறார், ஆனால் போகப்போக பேச்சில் கோபம் தெரிக்கிறது.
உண்மையோ, இல்லையோ
இந்த ஆடியோ குறித்து டி.சி.எஸ் நிறுவன கார்பொரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு துணை தலைவர் பிரதிப்தா பக்சியிடம் கேட்டபோது "அந்த ஆடியோ பதிவு உண்மையானதா, இல்லையா, ஜோடிக்கப்பட்டதா என்பது குறித்து எங்களுக்கு உறுதியான தகவல் கிடைக்கவில்லை" என்றார். நீங்களே கேட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.