ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட9 பேர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட எட்டு பேரையும் விடுதலை செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா என 9 பேரும் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002ஆம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்த், கண்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில், விசாரணையின்போது கதிரவன், அப்பு ஆகியோர் இறந்து விட்டனர்.
14 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் நோட்டீஸ்
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, ஜெயேந்திரர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக பணியாற்றிய சங்கரராமன் செப்டம்பர் 3, 2004இல் கோயில் வளாகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரை கைது செய்தது தமிழக அரசு. அக்டோபர் 2005இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கு புதுவை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
விடுதலையான ஜெயேந்திரர்
இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முருகன் நவம்பர் 27, 2013 அன்று, சங்கரராமன் கொலைக்கான மூலக்காரணம் நிருபிக்கப்படவில்லை என்று கூறி ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேரை விடுதலை செய்தார். அப்போதைய புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் டெல்லி பாஜகவில் இருந்து பலர் பேசியதால் புதுவை அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை.
அரசு மேல்முறையீடு
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் பாஜக தலைவர்கள் சிலர் தமிழக அரசிடம் பேசியதாக தெரிகிறது இந்த வழக்கில் சட்டரீதியாக என்ன இருக்கிறதோ, அதை பின்தொடருங்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியதாகவும், அதன்பிறகே தற்போது மேல்முறையீட்டுக்குத் தமிழக அரசு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற படியேறும் ஜெயேந்திரர்
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலையானதன் மூலம் சற்றே நிம்மதியடைந்திருந்த ஜெயேந்திரர் அரசு செய்துள்ள மேல்முறையீடு மூலம் மீண்டும் நீதிமன்ற படியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.