ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வரும் 28ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு தாக்கப்பட்டார். சங்கர மடத்தில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்தியதால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார். எனவே, ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது மட்டும் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அப்பு கிருஷ்ணமூர்த்தி, கதிரவன் ஆகிய இருவர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரும் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். விசாரணைக்கு ஜெயேந்திரர் ஆஜராகும்போது அவரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.