உறுதிமொழியை தினமும் படியுங்கள், உருப்படுவீர்கள்.. யாரை சொல்கிறார் தெரியுமா குருமூர்த்தி?
பதவியேற்பின் போது வாசிக்கப்படும் உறுதிமொழியை தினமும் படியுங்கள் என எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பதவியேற்பின் போது வாசிக்கப்படும் உறுதிமொழியை அனைவரும் மறந்துவிடுகிறார்கள் என்றும், அவற்றை தினமும் படித்தல் அவர்களின் கடமை நினைவுக்கு வரும் எனவும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி என்பது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வெளிப்படையாக அடிப்பட்டு கொண்டிருக்கும் பெயர். ஆனால் விஷயம் அறிந்தவர்களுக்கு ஆடிட்டர் குருமூர்த்திக்கும் தமிழக அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு பல தசாண்டுகள் என்பது தெரியும்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்தின் ஒவ்வொரு அசைவுகளும், மத்திய அரசின் மேற்பார்வையில் குருமூர்த்தியின் கட்டளைகள் தான் என்று கூறுபவர்களும் உண்டு. ஆட்சியாளர்களையே ஆண்மையற்றவர்கள் என்று பொதுவெளியில் அவர் விமர்சித்தபின், குருமூர்த்திக்கும் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே தலைதூக்க ஆரம்பித்து விட்டது.
ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி, நேற்று உயர்நீதிமன்றத்தில் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என்று அனைவரும் பதிவியேற்பு உறுதிமொழியை தினமும் படிக்கவேண்டும் என்றார்.
அதனை தினமும் படித்தால் அவர்களின் கடமை நினைவுக்கு வரும், மக்களுக்கு செய்யவேண்டியதும் நிறைவேற்றப்படும். இதேபோல தான் வழக்கறிஞர்களும் பதிவியேற்பின் போது கூறும் உறுதிமொழியை காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டும், என்றார்.
குருமூர்த்தியின் இந்த உறுதிமொழி என்ற வார்த்தை பதவியேற்பு உறுதிமொழியை குறிக்கிறதா? அல்லது அவரிடம் ஆட்சியாளர் ரகசியமாக எடுத்த உறுதிமொழி எதையாவதை குறிக்கிறதா? என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் முன்வைத்துள்ளனர்.
எத்தனையோ பார்த்துவிட்டேன் இதெல்லாம் எனக்கு பொருட்டே இல்லை என்று ஆட்சியாளர்களின் எதிர்ப்பை அசால்டாக எதிர்க்கொள்ளும் குருமூர்த்தியின் இந்த பொதுவெளி "உறுதிமொழி" மிரட்டலுக்கு ஆட்சியாளர்கள் என் பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
முன்னதாக ஆட்சியாளர்களை விமர்சித்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு வரும் குருமூர்த்திக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர்கள் கருப்பு கொடி காட்ட தயாராக இருந்தனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த விஷயம் அறிந்தும் குருமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது அவருக்கு எதிராக ஒரு கருப்பு கொடிக்கூட காட்டப்படவில்லை, காட்டுவதற்கு யாரும் முன்வரவில்லை என்பது தான் உண்மை.