ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கில் வரும் 29-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 29 ஆம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி ராஜ மாணிக்கம் அறிவித்தார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு தாக்கப்பட்டார். சங்கர மடத்தில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்தியதால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது கொலை முயற்சி வழக்கை பட்டினப்பாக்கம் காவல் துறையினர் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடர்புடைய அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்து விட்டனர். ரவி சுப்பிரமணியன் என்பவர் "அப்ரூவராக' மாறி விட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜயேந்திரர் உள்பட 9 பேர் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜ மாணிக்கம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் விஜயராஜும், ஜெயேந்திரர் உள்ளிட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் வெங்கட்ராமன், கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் இறுதி வாதங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தீர்ப்பை ஏப்ரல் 29 ஆம் அறிவிப்பதாக நீதிபதி ராஜ மாணிக்கம் அறிவித்தார்.