புரட்டாசி பவுர்ணமி.... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலை: புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. மலைதான் இறை ரூபாமாக திகழ்கிறது. எனவே இங்கு தினசரியும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர். இதன் கிரிவல்ப்பாதை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 14 கி.மீ தூரமாகும்.
கிரிவலம் செல்லும் போது இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய 8 லிங்கங்களை தரிசிக்கலாம்.
இந்நிலையில் இம்மாதம் பவுர்ணமியை ஒட்டி, கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 15 சனிக்கிழமை மதியம் 12.36 மணிக்கு தொடங்கி, 16ம் தேதி ஞாயிறு காலை 10.27 வரை பவுர்ணமி உள்ளதால், அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் சிறப்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.