காதலியை திருமணம் செய்வதாக போலீசில் ஒப்புக் கொண்டுவிட்டு தற்கொலை செய்த ஆட்டோ டிரைவர்!
சேலம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக போலீசாரிடம் ஒத்துக் கொண்டு எழுதி கொடுத்துவிட்டு வந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு வந்த பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் மோட்டூரைச் சேர்ந்தவர் 19 வயதான பிரியா. நாமக்கல் மாவட்டம் ஒண்டிக்கடையைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, இரு வீட்டாருக்கும் காதல் விஷயம் தெரிய வர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு குடும்பத்தினரும் வேறு வேறு சமுதாயம் என்பதால் எதிர்ப்பு மிகத் தீவிரமாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன முருகன் காதலி பிரியாவை விட்டு பிரிந்துவிட்டார்.
தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத பிரியா, வாழப்பாடி போலீசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியில், முருகன் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக, கடந்த 29ம் தேதி போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், ஒண்டிக்கடையில் உள்ள விவசாயத் தோட்டத்துக்கு சென்ற முருகன், அங்கே விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
இதனையடுத்து, மோதல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீசார், மாவட்ட எல்லை பகுதியான மோட்டூர் மற்றும் ஒண்டிக்கடை பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.