நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை: உறவினர்கள் மறியல், போலீஸ் தடியடி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர் கொலையை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன.
நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் பொன்னையா. ஆட்டோ டிரைவரான இவர், இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டு விட்டு திரும்ப வந்துள்ளார். வண்ணாரபேட்டை அருகே அவர் வந்த போது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று பொன்னையாவை சரமாரியாக வெட்டிச்சாய்த்துள்ளது. இதில் பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறியல் பதற்றம்
இதனிடையே ஆட்டோ டிரைவர் கொலையைக் கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதில் ஒரு பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனையடுத்து ஒரு பிரிவினர் ஆட்டோவிற்கு தீவைத்து எரித்தனர். இதனால் எழுந்த பதற்றத்தை அடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தொடர் கொலைகள்
நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாத காலத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர்கொலைகளால் சம்பவம் சாதாரண பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஸ்ரீவைகுண்டத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்தப்பரபரப்பு அடங்கும் முன்னர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.