இந்த இடங்களில் உங்கள் டூவீலர், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்கலாம்!
சென்னை: மழை வெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனம், ஆட்டோக்களை இலவசமாக பழுதுபார்க்கும் முகாம்களின் முகவரிகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விடச் சற்றுக் கூடுதலாக மழையைக் கொட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த மாத இறுதியில் கடலூர், சென்னைப் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்தன.
அந்தப் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்து, தங்கள் வாகனங்களைப் பழுது பார்த்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் வெள்ளம் வந்து சென்னை நகரையே மூழ்கடித்தது. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழுதாகின.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வசதிக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான இலவசமாக பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
இந்த முகாமை நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 10 நாட்களுக்கு நான்கு மோட்டார் வாகன நிறுவனங்கள் நடத்துகின்றன. மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த முகாம்கள் நடக்கும் முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf என்ற இணையதளத்தில் காணலாம். அதில் போன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட தகவல் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடம்பெற்று உள்ளது.