ஆட்டோ சங்கர் கூட்டாளி செல்வராஜனுக்கு 46 வயதில் திருமணம்.. பரோலில் வந்து அக்கா மகளை மணந்தார்!
மதுரை: ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஆட்டோ சங்கர் கூட்டாளிக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது.
ஒரு காலத்தில் சென்னையை கலக்கியவர் ஆட்டோ சங்கர். திருவான்மியூரில் வசித்து வந்த இவர் விபச்சாரம், ரவுடித்தனம் என இருந்தவர். பல கொலைகளைச் செய்து பின்னர் போலீஸில் சிக்கினார். விசாரணையின் இறுதியில், ஆட்டோ சங்கர், அவரது மைத்துனர் சிவாஜி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
சங்கருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்தான் ஆட்டோ செல்வராஜன். பின்னர் இவர் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு தற்போது 46 வயதாகிறது. இந்த நிலையில், இவரது அக்காள் மகள் கலாராணிக்கும், இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
திருமணத்திற்காக செல்வராஜன், 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒரு ஓட்டலில் கலாராணிக்கும், செல்வராஜனுக்கும் நேற்று திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தை திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் நடத்தி வைத்தார்.
தனது மாமாவை மனம் உவந்து மணமுடித்துக் கொண்டதாக கலைராணி தெரிவித்துள்ளார்.