"மீ்ட்டர்" திட்டம் தோல்வி.. அடுத்த "மேட்டர்" ஆட்டோ வார்டன் – சென்னை போலீஸ் அறிமுகம்
சென்னை: சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அதை மீண்டும் செயல்படுத்த "ஆட்டோ வார்டன்" என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்து உள்ளனர்.
சென்னையில் கடந்த 2012 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் கட்டணப்படி மீட்டர் இயக்குவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதற்கு ஒத்துழைக்கவே இல்லை.
மீட்டர் இல்லாத ஆட்டோகளுக்கு சீல், அடையாள போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தும் இதுவரை ஆட்டோ மீட்டர் இயக்கம் சென்னையில் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக "ஆட்டோ வார்டன்" என்ற திட்டத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தயாராகி வருகின்றனர்.
இத்திட்டத்தின் படி சென்னையில் போக்குவரத்து உதவி ஆணையரின் கீழ் உள்ள 12 உட்கோட்டங்களில் ஒரு உட்கோட்டத்திற்கு 10 ஆட்டோ ஓட்டுனர்கள் வீதம் 120 ஆட்டோ ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்கள் மீது வழக்கு புகார் எதுவும் இருக்க கூடாது. தீய பழக்கங்கள் இல்லாதோராகவும் இருத்தல் அவசியம். ஒரு உட்கோட்டத்திற்கு 10 ஆட்டோ ஓட்டுனர்கள், ஒரு சட்டம் - ஒழுங்கு போலீசார், ஒரு போக்குவரத்து போலீசார் ஆகியோர் அடங்கிய "ஆட்டோ வார்டன் " குழு அமைக்கப்படும்.
இந்த குழு ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து மீட்டர் இயக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தும். தேவைப்பட்டால் ஆட்டோக்களை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தும் கூட திருந்தாத ஆட்டோ டிரைவர்கள், எப்படி சக ஆட்டோ டிரைவர்கள் சொல்வதைக் கேட்பார்கள் என்று தெரியவில்லை. இது தலையை சுற்றி மூக்கைத் தொடும் கதையாக இருக்கிறதே....!