அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப் பாய்ந்த காளைகள்.. வீறு கொண்டு அடக்கிய இளைஞர்கள்
மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை காண மக்கள் குவிந்துள்ளனர்.
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு இளைஞர்கள், காளைகளை அடக்கி வருகின்றனர்.
யுக புரட்சி போல ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடைபெற்ற புரட்சி, மத்திய, மாநில அரசுகளை அசைத்துப்பார்த்தது. ஜல்லிக்கட்டுக்காக சட்டத்தை இயற்ற வைத்தது. ஜல்லிக்கட்டு சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. காலரி அமைக்கும் பணிகள், காளைகளை பதிவு செய்யும் பணிகள் முடிவடைந்து இன்று ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
வழக்கமாக பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் கடந்த 3 வருடமாக இது நடைபெறாமல் போய் விட்டது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த தடைகள் அகன்றதால் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் காளைகள் குவிந்துள்ளன. காளையர்களும் குவிந்துள்ளனர்.
இன்று காலையில் மந்தையம்மன் கிராம கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அய்யனார் கோவிலில் சம்பிரதாய முறைப்படி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன் பிறகு வாடிவசால் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றனர். அதை 1000க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு அடக்கி வருகின்றனர்.
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மதுரை காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் காவல்துறையினர் செய்துள்ளனர்.