ஆவின் பால் கலப்பட வழக்கு.. சிபிசிஐடி போலீஸ் மீதே குற்றச்சாட்டை திருப்பிவிட்ட வைத்தியநாதன்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைத்திய நாதன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், "வழக்குக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எங்களை சேர்த்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடித்து வந்து ஆஜர் படுத்தாமல் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.
ஆவின் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியில் பாலை திருடி, அதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றி ஒரு கும்பல் கலப்படத்தில் ஈடுபட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், ரமேஷ், சத்தியராஜ், அன்பு உள்பட 8 பேரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், பால் ஏற்றுமதி வாகன காண்டிராக்டரான சென்னையை சேர்ந்த அரசியல் பிரமுகர் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி ஆகியோருக்கும் இந்த மோசமான செயலில், தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சிபிசிஐடி
இந்த மோசடியில் பலருக்கும் தொர்புள்ளது தெரியவந்ததால், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வைத்தியநாதன் உள்பட 23 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் சிறையில் உள்ளனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
வழக்கு கடந்த பாதை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் வைத்திய நாதன், ரேவதி மற்றும் லாரி டிரைவர்கள் உள்பட 23 பேர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறுதி குற்றப்பத்திரிகை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தாக்கலானது.
குற்றச்சாட்டு
இந்த வழக்கு விசாரணை நீதிபதி அன்புமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்திய நாதன், ரேவதி உள்பட 25 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது இந்த வழக்குக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறாக எங்களை சேர்த்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடித்து வந்து ஆஜர் படுத்தாமல் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று வாதிட்டனர்.
விசாரணை ஒத்திவைப்பு
வழக்கை கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்தியநாதன் தரப்பு கேட்டுக்கொண்டது. வழக்கு விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அன்புமணி உத்தரவிட்டார்.