வேந்தருக்கு எதிராய் ஆசிரியர்கள்; ஆசிரியர்களுக்கு எதிராய் மாணவர்கள- வலுக்கும் பல்கலை. போராட்டம்
கோவை: அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தரை பதவி விலகக்கோரி பேராசிரியைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மீனாட்சிசுந்தரம் இருந்து வருகின்றார். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருவதுடன், 200 பேராசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் பேராசிரியைகளுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நேரடியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி பேராசிரியைகள் விசாரித்தபோது வேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட விதிமீறல் காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு நிதி வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில் இந்த பல்கலைக்கழகத்தை, சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த பேராசிரியைகள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த மாதம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் வகுப்புகள் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. வழக்கம் போல் பல்கலைக்கழகத்திற்கு வந்த பேராசிரியைகள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் அவர்கள் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் திரண்டு, மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது.
நள்ளிரவில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியைகளிடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்க மறுத்த பேராசிரியைகள் அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக தேதி அறிவிக்காமல் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது என்று நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
ஏற்கனவே 10 நாட்களுக்கு மேல் விடுமுறை அளித்ததில் பாடங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் விடுமுறை அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த துணை கமிஷனர் ரம்யாபாரதி தலைமையிலான போலீசார், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடுமாறு எச்சரித்தனர்.
அதற்கு மாணவிகள் உடன்படவில்லை. இதனால் மாணவிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவிகள் வேந்தர் அறையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் மாணவிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து விட்டனர். பல்கலைக்கழகத்தை உடனடியாக திறந்து வகுப்புகளை நடத்தாவிட்டால், மாணவர் அமைப்புகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து கலைந்து சென்றனர்.