சமன்வே பாஷா சம்மன் விருதைத் தட்டிச் சென்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்”!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" என்ற நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நாவலில், திருச்செங்கோடு மக்களின் வாழ்க்கை முறை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மேலும், அக்கோவில் இறைவன் பற்றியும் தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் கடும் எதிர்ப்பையடுத்து தனது நாவலில் அந்த ஊரைக் குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்பு கேட்டதுடன், இனி எழுதப்போவதில்லை என்றும் அறிவித்தார். இந்த நிலையில், பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு அகில இந்திய அளவில் "சமன்வே பாஷா சம்மன்" என்னும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் நேற்று நடந்த 4 ஆவது இந்திய மொழிகள் திருவிழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் சச்சின் கேத்கர், மங்கலேஷ் தாப்ரல், மித்ரா புகன், அருந்ததி சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு சமன்வாய் பாஷா விருதுக்கு மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை தேர்வு செய்தது.
நவம்பர் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய மொழிகளுக்கான திருவிழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட உள்ள விருது மாபெரும் பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்ட தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள நவீன அங்கீகாரம்." என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.