ஆவின் பால் கலப்பட வழக்கு– வைத்தியநாதனின் மனைவியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதனின் மனைவியையும் கைது செய்வதற்கு போலீசார் அவரை தேடி வருகின்றார்கள்.
ஆவின் பாலில் தண்ணீரைக் கலந்து பால் திருடியதை கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு போலீசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இக்கலப்பட மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதனை கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். அவரை தொடர்ந்து பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள், பால்பண்ணை மேலாளர் உள்ளிட்ட மேலும் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 18 ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் வைத்தியநாதனின் மனைவி ரேவதிக்கு சொந்தமான தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனமும், ரேவதியும் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் ஆவின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அப்துல் ரகீம் என்பவரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து வைத்தியநாதனின் மனைவி ரேவதி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
தற்போது தலைமறைவாக உள்ள ரேவதியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 முறை ஜாமீன் கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் வைத்தியநாதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆவது முறையாக ஜாமீன் கேட்டு வைத்தியநாதன் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி குமார் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.