அயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?
Recommended Video
சென்னை: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஒரு பார்வை இதோ.
அயோத்தி விவகாரம் என்பது நீண்டகால பிரச்சினை என்பதால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்த வழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணை அக்டோபர் 16ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நேற்று இரவில் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அறிவிப்பு வெளியான உடனேயே நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களிலும், கர்நாடகாவிலும், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை ஒட்டியுள்ளது தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் இன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டதாக காலை தகவல் வெளியானது.
அயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்பு
எனவே இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதன்பிறகு, எந்த விடுமுறையும் அளிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தாலுகா இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் வழக்கமாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் பல மாவட்டங்களிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.