‘ஆசை’ படஸ்டைலில், பாலீதின் பையால் சென்னை டாக்டர் தற்கொலை
சென்னை: தனது முகத்தைப் பாலிதீன் கவரால் மூடி தற்கொலை செய்து கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேதா மருத்துவர் ஒருவர்.
சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 23 வயது ஆயுர்வேத மருத்துவர் சுதர்சன். தாயுடன் வசித்து வரும் இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தனிமையில் இருந்த சுதர்சன் பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்கக் கட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பணி முடிந்து வீடு திரும்பிய அவரது அம்மா, மகனின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சுதர்சன் தற்கொலை செய்து கொள்வற்கு முன்னர் தொலைபேசியில் பேசியது தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில், காதலில் ஏற்பட்ட தோல்வி கூட சுதர்சனின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுதர்சனின் தாயார் அளித்த தகவலின் படி, சுதர்சனை மேற்படிப்பிற்காக கேரளா செல்ல அவரது தாய் வற்புறுத்தியதாகவும், ஆனால், தாயாரை தனிமையில் விட்டுச் செல்ல மனமில்லாமல் சுதர்சன் குழப்பத்தில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தனது தற்கொலை குறித்து சுதர்சன் கடிதம் எதுவும் எழுதி வைக்காததால், விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.