சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: தமிழகம் முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்
சென்னை: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான முக்கிய பொருட்களான தேங்காய், வாழைப்பழம், வாழை இலை போன்றவைகளை அதிக அளவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதியை நவராத்திரியின் 9ம் நாளில் வணங்கினால் கல்வி வளம் பெருக சரஸ்வதி தேவியை வணங்குவது மரபு. அதேபோல தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படும் உபகரணங்களை சுத்தம் செய்து அவைகளை கடவுளாக நினைத்து வழிபடுவதும் ஆயுதபூஜையின் சிறப்பாகும்.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் கடவுளாக பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
தமிழ்நாட்டில் இன்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீடுகளில் சரஸ்வதி தேவியின் படத்தை அலங்கரித்து புத்தகங்களை அடுக்கிவைத்து பொறி, கடலை, சுண்டல் படைத்து வணங்கினர்.
ஆயுதபூஜை தினமான இன்று வீடுகளிலும், தொழிற்சாலை, பெரிய நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளுக்கு பூஜை, எந்திரங்களை சுத்தம் செய்தும் பூஜை செய்து படையலிட்டு கொண்டாடினர். அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு, முகப்புகளில் வாழைக்கன்றுகள் கட்டப்பட்டன.
ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் கிடு, கிடுவென விலை உயர்ந்தது. அதாவது, கடந்த வாரம் ஆப்பிள் கிலோ ரூ.70 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. இது நேற்று ரூ.90 முதல் ரூ.140 வரை தரத்துக்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. ரூ.25 முதல் ரூ.35 வரை விற்கப்பட்ட சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ.45 வரையும் விற்கப்பட்டது.
இதே போல, கொய்யாப்பழம், மாதுளம்பழம், அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்கப்பட்டது. இதே போல, பொரி ஒரு படி ரூ.30, உடைத்த கடலை கிலோ ரூ.50, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.100, வாழைக்கன்று இரண்டு ரூ.30, மாவிலை தோரணம் இரண்டு ரூ.10, வெள்ளை பூசணி ரூ.100 முதல் ரூ.300 வரை, தென்னை மட்டை தோரணம் இரண்டு ரூ.20, மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்கப்பட்டது.
சந்தைகளில் சுண்டல், பொறி,கடலை போன்றவை சிறியது முதல் பெரிய பாக்கெட் வரை கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.