காவிரி விவகாரம்: சேலம் ஆட்சியர் அலுவலக கல்லறையில் ஆவிகளிடம் மனுகொடுத்த அய்யாக்கண்ணு
சேலத்தில் கல்லறை ஆவிகளிடம் மனு கொடுத்து அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video
சேலம்: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கல்லறை ஆவிகளிடம் கோரிக்கை வைக்கும் போராட்டத்தில் அய்யாக்கண்ணு ஈடுபட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குமரி முதல் கோட்டை வரை தென்னக நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி அய்யாக்கண்ணு நேற்று சேலம் வந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அய்யாக்கண்ணு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் 'காவிரியை மீட்போம், விவசாயத்தை காப்போம்'என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் அய்யாக்கண்ணு, அங்குள்ள ஆங்கிலேயர் கால கல்லறையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கழக நிர்வாகிகளும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காவிரி மேலாண்மை அமைக்கும்படி, ஏராளமானமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தற்போது இந்த கல்லறையில் உள்ள ஆவிகளிடம் எங்களுடைய கோரிக்கையை வைக்கிறோம்.
இந்த ஆவிகள், பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.