சொன்னீர்களே செய்தீர்களா?... ஆர்.கே. நகர் தொகுதியில் கோவணத்துடன் ஊர்வலம் நடத்த அய்யாக்கண்ணு திட்டம்!
விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தி ஆர்.கே நகர்த் தொகுதியில் கோவணத்துடன் ஊர்வலம் செல்ல இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருச்சி : விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தி ஆர்.கே நகர்த் தொகுதியில் கோவணத்துடன் ஊர்வலம் செல்ல இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தங்களுக்கு முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்த ஊர்வலம் நடக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயக் கடன்கனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி வரை சென்று போராட்டம் நடத்திவிட்டோம். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவே இல்லை
சென்னையில் வேளாண்மை இயக்குனரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஏலம் விடக்கூடாது, கடன் இருந்தாலும் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் வாங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். முதல்வர் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்.கே நகர்த் தொகுதியில் 500 விவசாயிகள் கோவணம் கட்டிக் கொண்டு ஊர்வலமாக செல்ல இருக்கிறோம். டெல்லியில் இருக்கும் ஆட்சியாளர்கள் தான் எங்களது கோரிக்கைகளை கேட்கவில்லை, தமிழக ஆட்சியாளர்களாவது எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தான் இந்த ஊர்வலத்தை நடத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.