விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அரசு தவறிவிட்டது: அய்யாக்கண்ணு விளாசல்
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மேலும் கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தமிழக அரசு இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த விவசாயிகள் உடல்நலக்குறைவு ,வயது முதிர்வினாலேயே 82 பேர் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர் சொந்த காரணங்களுக்காகவே தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
விவசாயிகள் கண்டனம்
இந்நிலையில் தமிழக அரசின் இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடனை தள்ளுபடி செய்தால்..
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தற்கொலையை தடுக்க முடியும் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.
தரக்குறைவாக பேசுவதால்..
வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளின் மனைவி மக்களை தரக்குறைவாக பேசுவது மற்றும் வீடு, நிலங்களை விற்று கடனை அடைக்குமாறு கூறுவதாலேயே விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
அரசு கண்டிக்க வேண்டும்..
வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதை அரசு கண்டிக்க வேண்டும் என்றும் அய்யக்கண்ணு வலியுறுத்தினார். தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் அய்யாக்கண்ணு கூறினார்.