அய்யா காப்பாத்துங்க... காலில் விழுந்து அய்யாக்கண்ணு போராட்டம்... குலுங்கி சிரித்த அதிகாரிகள்
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அதிகாரிகளின் காலில் விழுந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
டிராக்டரை வணிக வாகனமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது டிராக்டர் மீதான புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அய்யா காப்பாற்றுங்க என்றும் கோஷமிட்டு சாஷ்டாங்கமாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் காலில் விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடையாத அதிகாரிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் மனமுடைந்த விவசாயிகள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது 10 நாட்களுக்குள் டிராக்டர் மீதான உத்தரவை திரும்ப பெறாவிட்டால் ஆட்சியரகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.