சாது மிரண்டால் காடு கொள்ளாது.... 'வெளிமாநில' ஹெச். ராஜாவுக்கு அய்யாக்கண்ணு 'வார்னிங்'
தம்மை பற்றி இழிவாக, கேவலமாக பேசிவரும் ஹெச். ராஜாவுக்கு அய்யாக்கண்ணு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தீவிரவாதிகளுடன் தமக்கு தொடர்பிருப்பதாக கூறிவரும் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலர் ஹெச். ராஜா தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறார். ஏதோ ஒரு ஊர்வலத்தில் பின்லேடன் படம் எடுத்து செல்லப்பட்டதை ஜல்லிக்கட்டு புரட்சியின் போது பயன்படுத்தினார்கள் என பொய்யை பரப்பினார்.
இதேபோல் விவசாயிகள் போராட்டத்தை இழிவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி வந்தார். டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவுக்கு ஆடி கார் இருக்கிறது என அண்டப் புளுகை அவிழ்த்துவிட்டார் ஹெச். ராஜா.
அப்சல்குருவுடன் தொடர்பு
இந்த நிலையில் டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணுவுக்கும் தீவிரவாதி அப்சல்குருவுக்கும் தொடர்பு இருக்கிறது; அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என அடுத்த பொய்யை அள்ளி வீசினார் ஹெச். ராஜா. இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஹெச். ராஜா தமிழகத்தில் நடமாடவே முடியாது எனவும் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அய்யாக்கண்ணு பதிலடி
இதனிடையே தம் மீதான ஹெச். ராஜாவின் விமர்சனங்களுக்கு அய்யாக்கண்ணுவும் பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக அய்யாக்கண்ணு கூறுகையில், இவரு வெளிமாநிலத்தில் இருந்து வருவாரு...இங்க எதை வேணும்னாலு பேசுவாரு... தமிழ்நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் இளிச்சவாயங்க.. காதுல பூ சுத்தி இருக்காங்கன்னு நினைக்கிறார்.
அளந்து பேசுங்க...
சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஹெச். ராஜா அளந்து பேச வேண்டும். அளவை மீறி பேசுவது அவருக்கு அழகல்ல..அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தையும் கெடுக்க பார்க்கிறார். இவர் மாதிரி ஆட்களால்தான் அந்த இயக்கமே கெடுது.
கேவலமாக பேசுகிறார்...
பாரதிய கிஷான் சங்கத்தில் நாங்கள் இருந்தபோது யோக்கியர்கள்... அதைவிட்டு வெளியே வந்துவிட்டதால் நாங்கள் அயோக்கியர்களா? என்னய்யா நாட்டுல அக்கிரமம்... தவறாக, கேவலமாக பேசுவதை ஹெச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும். நான் போய் ஹெச்.ராஜா வீட்டில் 25 வருஷமாக படுத்திருந்தேன்னு சொல்றாரே... அதுக்கு என்ன அர்த்தம்? கேவலமாக பேசுகிறார் ஹெச். ராஜா. இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.