ஏன் சாமி.. ஒய் திஸ் கொலை வெறி கோபம்??
சபரிமலைக்கு பெண்களா? என்று ஒரு பக்தர் பாடலை பாடி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சென்னை: இப்படி கூட எதிர்ப்பை காட்டலாம் போல இருக்கே!
நாட்டில் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எதிர்ப்புகளின் வெளிப்பாடுகள் எல்லாம் நமக்கு பரிச்சயமானதுதான்.
ஃபேமஸ் ட்யூன்
சமீபத்தில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்கியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்படி தெரியுமா? அவர் ஒரு ஐயப்பன் பக்தர் போல இருக்கிறது. பாடிக் கொண்டே தீர்ப்பை எதிர்க்கிறார். ஃபேமஸ்-ஆன ஒரு பக்தி பாட்டின் ட்யூனில் இந்த பாட்டும் அமைந்துள்ளது.
குடும்ப பிரச்சனையா?
பாடலின் சாராம்சம் முழுதும் தீர்ப்புக்கு எதிரானதாகத்தான் உள்ளது... வரிகள் அனைத்தும் தீர்ப்பின் கண்டன வரிகளே... சபரிமலை கோயிலின் ஐதீகம், ஆகம விதிகள், பாரம்பரியம், அனைத்தையும் பாடிக் காட்டி, அத்துடன் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்து 5 பேரும் முடிவெடுக்க இது என்ன உங்கள் குடும்ப பிரச்சனையா என்று பாடிக் கொண்டே நீதிபதிகளிடம் கேள்வி எழுப்புகிறார் இந்த பக்தர்.
புத்தி வரவில்லையா?
80 கோடி மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் யாரையும் கேட்காமலே முடிவெடுத்தது எவ்வளவு பெரிய குற்றம்? என்று நீதிமன்றத்தை விளாசியவாறே பாடுகிறார். ஐயப்பனின் கோபத்தை ஒருமுறை பார்த்து கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா என்றும் அடிநாத ராகத்துடனே கேட்கிறார்.
சாந்த சொரூபர்கள்
பொதுவாக பக்தர்கள் என்பவர்கள் சாந்த சொரூபர்களாக இருப்பார்கள். முழுமையான பக்தி மார்க்கத்தில் இல்லாவிட்டாலும் விரதம் இருக்கும் நாட்கள், அல்லது மலைக்கு போகும் சமயங்களில் மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடிப்பார்கள், கட்டுக்கடங்காத கோபக்காரர்களும் விரத நாட்களில் மிகவும் சாந்த மனப்பான்மையுடன் பக்தி பளிச்சிட மின்னுவார்கள்.
முரட்டு பக்தர்
ஆனால் இந்த பக்தர் கொஞ்சம் முரட்டு பக்தர் போல இருக்கிறது. உடை என்னவோ ஐயப்பனுக்கான உடை அணிந்திருக்கிறார். ஆனால் பாட துவங்கும் போதிலிருந்து முடிக்கும்போது வரை முகம் முழுவதும் டெரர்தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின் கோபம் முகத்தில் கொப்பளிக்கிறது. இவ்வளவு கொலைவெறியுடன் பல்லை கடித்து கொண்டு பாட்டு பாடும் ஐயப்ப பக்தரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சாமிகளே இப்படிக் கோபப்பட்டா எப்படி சாமி.. கொஞ்சம் கூல் ஆகுங்க!